மறு இதயம்.
நூறு குற்றவாளிகள் தப்பிப்பதை விட, ஒரு நிரபராதி தண்டிக்கப்படுவது சட்டத்திற்கு சரிவராது என்பது சுத்த பேத்தல்எஸ்.ஏ.சந்திரசேகர் கற்றுக்கொடுத்தது.
விண்ணைத் தாண்டி வருவாயா-வை பதின்பருவத்தினர் முதல் முதிர்கன்னிகள் வரை அவரவர் காலகட்டங்களின் காதல் காவியமாகவே ஏற்றுக்கொண்டுவிட்டது பெருகிவரும் ஜஸ்டின் பீபர் ரசிப்புத்தன்மயைப் போன்றே இளைஞர் சமுதாயத்தின் சீர்கேடேயன்றி வேறொன்றுமில்லை. பத்து வருஷங்களுக்கு முன் கார்த்திக் என்றழைக்கப்பட்ட நாயகனை வைத்து மிஸ்டர் மணிரத்னமும் ஒரு படம் எடுத்தார். என்ன, ஒரே வித்தியாசம் மணிரத்னம் எப்போதாவது சுமாராக ஒரு படம் எடுத்து தொலைப்பார். கௌதம் பீட்டர் மேனன் எப்போதுமே சுமாராகத்தான் படம் எடுத்துத் தொலைப்பார். காலக்கொடுமையே சுமாரான மணிரத்னம் படம் கூட, கடும் உழைப்பிலும், பன்மடங்கு பெரிய பொருட்செலவிலும் உருவான விதாவ-விற்கு எவ்வளவோ பரவாயில்லை. எனக்குத்தெரிந்தவரை வி.தா.வ தான் இப்போதைக்கு கௌதமின் ஆகச்சிறந்த படைப்பாகக் கருதப்படுகிறது. Contemporary Classsic. மண்ணாங்கட்டி.
அலைபாயுதேவில் சிலிர்க்க வைத்த Late 90s இசைப்புயல் பத்து வருடங்களுக்குப் பிறகு அந்நியப் படங்களில் ஆர்வமாகிவிட்டார் என்ற குற்றச்சாட்டு அபத்தமானது. ராவணனில் ரஹ்மான் அதே கம்பீரத்தோடு இன்னமும் இசையமைக்கத்தான் செய்கிறார். பி.சி.ஸ்ரீராம்? அட, மனோஜ் பரமஹம்சா எல்லாம் சும்மா பின்றார்பா.. முதல் படம் மாதிரியா தெரியுது அவர் செதுக்கிய ஈரம்? த்ரிஷா ஷாலினியை விட கவர்ச்சியானவர் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஒரு அறிமுக நாயகனை விட ‘ஐ யாம் ஸ்டில் எ யங்’ சூப்பர்ஸ்டாரை வைத்துக்கொண்டு, கௌதம் மேனனால் ஆனதெல்லாம் இந்த சூர மொக்கை தானா? இதுக்கு ஏன் சார் இவ்ளோ சீனு? அலைபாயுதே முழுக்க டப்பிங்-எடிட்டிங் சொதப்பல் தெரியும். பச்சை நிறமே பாட்டில் கூட தப்புத்தப்பாக வாயசைப்பார்கள். காதல் சடுகுடுவிற்கு பிறகு வரும் பெரிய சண்டையில் காட்சி முழுக்க வேறு ஏதோ பாஷையில் உதடுகள் உளறுவது கண்கூடு. சுஜாதா என்ற காரணத்தை வேண்டுமானால் ஒரளவுக்கு ஒப்புக்கொள்ளலாம். மில்லினிய ஆண்டு தமிழ் சினிமாவிலும், ”சந்திச்சு பேசணும்”, ”சிதைஞ்சு போயிடுச்சு” என்றெல்லாம் எழுதினாலும் கூட, தாத்தா Paranoia என்று கூடவே எழுதுவதால் ஒண்ணுக்கொண்ணு சரியா போச்சு. ஆக, கௌதம் இன்னொரு Wannabe-மணிரத்னம், அவ்வளவே.
முதல் காட்சி. சுறுசுறுப்பான பைக், தெறிக்கும் இசை, டெனிம் ஜீன்ஸ் சட்டை. 90கள். *போல்ட், அண்டர்லைன்ட்*. ஒரு சின்ன விபத்து காரணமாக, திருப்பிவிடப்படும் வண்டி. விபத்து யாருக்கு என்று இப்போது சொல்லித் தெரியவேண்டியதில்லை. கதையின் களம், மெட்ராஸ். மறுபடியும் *போல்ட், அண்டர்லைண்ட்*. கட். வி.தா.வ. கௌதமின் அக்மார்க் டுபாக்கூர் டயலாக்குகள் + இலக்கின்றி அலையும் காட்சிகள். தேவாலயம், அந்த வெள்ளைக் கதவு, த்ரிஷா மாண்டேஜ், ஏ.வி.எம் உருண்டை, ஜெயில் செட், கிரிக்கெட் மட்டை. ஐ.பி.எல் விளம்பர ரகம். காட்சி ஊடகத்தில், சுருக்கமாக சில ஃப்ரேம்களிலேயே கிட்டத்தெட்ட அங்கு கதையே முடிந்துவிட்டது. படம் முடிந்த பிறகு ‘அட!’ சிண்ட்ரோமுக்காக, விமர்சனம் எழுத நாலாவது வரிசையில் இருட்டில் ரெனால்ட்ஸ் பேனாவை பிடித்துக்கொண்டிருக்கும் பத்திரிக்கைக்காரனுக்காக, ஒட்டுகிற போஸ்டரில் இருக்கும் த்ரிஷாவை வெள்ளித்திரையில் கண்டு விசிலடிக்கும் பையனுக்காக, அட யாருக்காகவாவது பார்த்து பண்ணியிருக்கலாமே சேட்டா!
கணேஷின் நகைச்சுவைக் காட்சிகளைப் பற்றி பலரும் பெரிதாக சொல்கிறார்கள். அலைபாயுதேவில் விவேக் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தது பலருக்கு நினைவில்லை. திக்குவாய்,, வெளியே விட்ட முழுக்கை சட்டையின் பட்டன் போட்ட, திருநீறு வைத்த, தொல்லைக்கார அக்கா போன்ற க்ளிஷே கதாபாத்திரத்தின் மகனாகிப்போன பாவப்பட்ட ஜீவன். இதே மாதிரி கணேஷுக்கு சொல்லுங்க பார்ப்போம்? க்ளைமேக்ஸுக்கு முன்னாடி மருத்துவமனையில் சக்தியைப் பார்த்து, வீட்டாரை கூட்டிவரும் வேலை. அவ்வளவுதான். ராமாயண அணில் மாதிரி. ஆமாம், கணேஷ் வி.தா.வ-வில் என்ன செய்கிறார். ஒரு தினுசாக பேசுகிறார். படகுச்சவாரி அழைத்துச் செல்கிறார், ட்ராலியில் ஏறி இறங்குகிறார்.. எதுக்கு? அதுசரி. யாராவது ஒருத்தர் இப்படி ஒப்புக்கு சப்பாணியாக இருந்தால் பரவாயில்லை. அத்தனை பேருமே லுலுவாயிக்கு வந்துபோனா கணேஷ் மட்டும் என்ன செய்வார் பாவம்! இன்னும் கௌதம் குரல் கொடுத்த அந்த அண்ணன், அந்த கனகன்றாவியான பாக்ஸிங் சண்டையைப் பற்றியெல்லாம் நான் விரிவாக திட்ட விரும்பவில்லை. ‘பிரமிட்’ நடராஜன், ராகசுதா, அந்த வீட்டுக்கார மலையாளி.. இரண்டு மூன்று காட்சிகளில் மட்டுமே வரும் அந்த ரெண்டு ரூபாய் டெலிஃபோன் பாப்பா, பக்கத்து சீட்டு ‘பாவம் புருஷன்’ ஆண்ட்டி, மளிகைக் கடைக்காரர்… இது பாத்திரப் படைப்பு. மொட்டை கிட்டி, லொட லொட தங்கை, த்ரிஷாவின் உசரமான ‘பூவிழிவாசலிலே’ அப்பா, தெலுங்கு நாயக-நாயகி.. வீண் விரயம்.
பாடல்கள் வரும் இடைவெளி ரொம்பவே கொடுமையானது. புகைபிடித்தல் உடல்நலத்திற்கு தீங்கானது என்று கொட்டை எழுத்துகளில் பெட்டிகளின் மேல் எழுதிவைத்திருந்த போதும் குடும்பப்பெண்களே கூட்டம் கூட்டமாக வந்து தம்மடிக்க நேரிடுவதை தவிர்க்க இயலவில்லை. தியேட்டருக்கு தாமதமாக வரும் மேன்மக்கள் காலை மிதித்து “Sorry” கேட்டு செல்வதிலும், தவறான சீட்டுகளில் உட்காரும் மடசாம்பிராணிகளை மாற்றி அமர்த்தி வைப்பதிலுமே ஹோசனாவைத் தவற விடுவது மேலும் வேதனையான விஷயம். ஷேக்ஸ்பியரைப் பொறுத்த வரை, மூன்று அங்கம் என்பது நாடக இயலின் பிரதான் விதி. பெரும்பாலும், இந்த விதியொற்றியே சுஜாதா பணியாற்றிய படங்கள் பயணம் செய்வதைக் காணமுடியும். கட்டாயம் இல்லாவிட்டாலும், இடைவெளி ஐஸ்கிரீம்-பப்ஸ் வியாபாரிகளின் நலன் கருதி, ஒரு அறிமுகம், ஒரு முடிச்சு, ஒரு முடிவு என்றாவது இருப்பது நலம். சரி, பாம்பே ஜெயஸ்ரீ பாடல், கவுதம் மேனன் வாய்ஸ்-ஓவர் எல்லாம் கூட சேர்த்துக்கலாம். கதையே இல்லாமல், களமும் இல்லாமல், முடிவும் இல்லாமல்.. படுத்துறீங்க சார்!
Reservoir Dogs போன்ற டாப்-ரேட்டட் மேற்கத்திய படங்களின் போஸ்டர்களை சிம்பு சுவரில் மாட்டி வைத்திருக்கிறார். ஃபேஸ்புக் பற்றி த்ரிஷாவும் சிம்புவின் தங்கையும் கதைக்கிறார்கள். கே.எஃப்.சி-யில் சாப்பிட வரும் த்ரிஷாவை சைட்டடித்துக்கொண்டே சிம்பு பிரியாணி கேட்கிறார். Attention to detail. Contemporary depiction. ஷாலினி ஸ்டிக்கர் பொட்டை கண்ணாடியில் ஒட்டுகிறார். வக்கீல் எக்கனாமிக் டைம்ஸ் ஒரு ஓரத்திலிருக்கும் கட்டிலில் படுத்திருக்கிறார்.. பக்கத்து அறையில் அவரும்-அவரது மனைவியும் இருக்கும் படம் அடைத்த பீரோவிலிருந்து அவரது மனைவி பணத்தை மாதவனுக்கு தருகிறார். ஷாலினியின் வீட்டைக் காட்டுகையில் சுவரில் ஒவ்வொரு காட்சியில் ஒவ்வொரு பொருள். மஞ்சள் பை, பீங்கான் புத்தர் முறம், பழைய குடை, அழுக்கு சட்டை, ஃப்ரேம் செய்த புகைப்படங்கள், ப்ளாஸ்டிக் பைகளில் காய்கறி. ஷாலினி வீட்டை விட்டுவிட்டு ஆட்டோவில் போகும்போது, ஆட்டோவின் பின் ஜன்னல் வழியாக எட்டிப்பார்க்கும் கேமிரா, அங்கிருந்து தெருவோரம் வந்து “ஷக்தி அக்கா! எங்கே போறீங்க?” என்று கத்தும் காலனிச் சிறுமிகள். ஸ்ரீராம், ரஹ்மான், மணிரத்னம் – எங்குமே தனித்தனியாக தென்பட்டுவதேயில்லை. செம்ம கெத்து.
எது எப்படி இருந்தாலும், அலைபாயுதே மணி சாரின் ஆகச்சிறந்த படைப்புமல்லை, படைப்புகளில் ஒன்றுமல்ல. நமது காலகட்டத்தின் காதல் காவியமா என்றால், தெரியவில்லை. ஆனால் நிச்சயம் விண்ணைத்தாண்டி வருவாயா நிச்சயம் காதல் காவியம்.. ம்ஹூம் ஒரு ’சுமார்’ தமிழ் படம் கூட கிடையாது.
நூறு நல்ல படங்களை கலாய்ப்பதை விட, ஒரு மொக்கை படத்தை பாராட்டுவது ஒரு பாவச்செயல், ஒரு பெருங்குற்றம், ஒரு மனிதநேயமற்ற செயல்.கௌதம் மேனன் கற்றுக்கொடுத்துக்கொண்டிருப்பது.